பிரதமருடன் ஓரிரு நாளில் ஆலோசனை ரெயில் கட்டண உயர்வு பற்றி 3 நாட்களில் முடிவு ரெயில்வே மந்திரி தகவல் ரெயில் கட்டண உயர்வு பற்றி 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா கூறினார். இதுபற்றி பிரதமருடன் ஓரிரு நாளில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கட்டண உயர்வுக்கு திட்டம்
ரெயில்வே துறை கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. இதை சமாளிக்க, பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தலாம் என்று ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த...
more... மாதம் இரண்டாவது வாரத்தில் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக, கட்டண உயர்வு பற்றி முடிவு எடுக்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா ஓரிரு நாளில் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
3 நாட்களில் முடிவு
இந்நிலையில், டெல்லியில், ரெயில்வே பொதுமேலாளர்கள், கோட்ட ரெயில்வே மேலாளர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற சதானந்த கவுடா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவது பற்றி ஏற்கனவே ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் மூன்று, நான்கு நாட்களில் முடிவு எடுத்து விடுவோம்.
அன்னிய முதலீடு
அதுபோல், ரெயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு எடுப்போம். ரெயில்வே நிர்வாகம் நிதி பற்றாக்குறையில் இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே, நிதி திரட்டுவதை முன்னுரிமை பணியாக கருதுகிறோம்.
இதுதொடர்பாக மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்த விரும்புகிறேன். நேற்று கூட அவருடன் சிறிது ஆலோசனை நடத்தினேன். திட்ட யோசனையுடன் வருமாறு அவர் கூறினார். எனவே, ஓரிரு நாளில் அவரை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்துவேன். அன்னிய நேரடி முதலீடு பற்றி அப்போது தெளிவான முடிவு எடுக்கப்படும்.
அன்னிய நேரடி முதலீட்டை ரகசியமாக கொண்டு வந்துவிட முடியாது. அதை வெளிப்படையாக செய்ய வேண்டும்.இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
முன்னதாக, ரெயில்வே பொது மேலாளர்கள் மாநாட்டில் பேசிய சதானந்த கவுடா, அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அங்கு அவர் பேசியதாவது:–
மக்கள் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து இந்த ஆட்சியை அளித்து இருக்கிறார்கள். அவர்கள் உடனடி பலன்களை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அங்கொன்றும், இங்கொன்றுமான மாற்றங்கள் சரிப்படாது. விரிவான மாற்றங்கள் வேண்டும்.
இந்திய ரெயில்வே, ஏராளமான பயணிகளையும், சரக்குகளையும் சுமந்து செல்கிறது. ஆனால், செயல் திறன், நேரம் தவறாமை, தூய்மை, சேவை ஆகியவற்றில் நாம் பின்னால் நிற்கிறோம். தற்போதைய பாணியிலான செயல்பாடுகளால் எந்த சாதனையையும் எட்ட முடியாது. செயல்படாத தன்மைக்கு மன்னிப்பு கேட்பதை சகித்து கொள்ள மாட்டோம். எனவே, ‘செயல்படுங்கள் அல்லது அழிந்து போங்கள்’ என்பதுதான் எங்கள் தாரக மந்திரம்.
புல்லட் ரெயில்
அதிவேக ரெயில்களை அறிமுகப்படுத்துவதே எனது முன்னுரிமை பணி. புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். ரெயில்களின் சராசரி வேகம், மணிக்கு 150 முதல் 200 கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
ரெயில்களின் அசுத்தம், உணவின் தரமின்மை, டிக்கெட் முன்பதிவு போன்றவை தொடர்பாக எனக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இப்பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக பேசலாம். உலகின் சிறந்த ரெயில்வேயாக இந்திய ரெயில்வேயை ஆக்க வேண்டும்.இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.